6/22/08

அப்பா

அதிசூர விநாயகர் அருள்கின்ற செங்கோட்டைப்
பதிவாழ் குளத்தையர் கோமதி தம்பதியர்
துதித்தார்கள் தெய்வத்தை பிள்ளை வரம்வேண்டி
உதித்தாரே உத்தமர்தான் ஆவணி அசுவதியில்

பூரணமாய் செல்வம் மணியான உள்ளம்
காரணமாய் வைத்தனரே ராஜாமணி நாமம்
வேலிபோல் மக்களைக் காக்கின்ற குணமறிந்தே
சாலிவா டீஸ்வரன் என்றழைத்து மகிழ்ந்தனரே

நடுநிசி ஆனாலும் பேரன் எதுகேட்பின்
சடுதியில் செய்துதரும் பாசமுள்ள பாட்டியுண்டு
அதிகாலை எழுந்து ஆலயம் சென்று
துதிபாடி மகிழும் நண்பர்கள் கூட்டமுண்டு

தந்தையும் அவரிரு தமையனும் சேர்ந்து
சொந்தமாய் செய்தனர் ஹோட்டல் வியாபாரம்
எழில்மிகு சேரநாட்டு செங்கோட்டையில் குடும்பம்
தொழிலோ பாண்டிநாட்டு சோழவந்தான் நகரம்

பதினைந்து வயதுவரை கவலையைக் கண்டதில்லை
விதியதன் விளையாட்டை வென்றவர் யாருமில்லை
எந்தஓர் தொழிலும் எடுபடாது குடும்பமே
சொந்த ஊர்விட்டு சோழவந்தான் சென்றதே

உணவகம் தொடங்கினர் கணேஷ பவனென்று
பணவரத்து ஆனால் முன்போல் இருக்கவில்லை
தந்தையின் பாரத்தை ஏற்கவே தனையனும்
அந்தசிறு வயதிலும் சிறிதும் தயங்கவில்லை

நெடுஞ்சாலைத் துறையில் குறைவான சம்பளம்
உடம்பை உறிஞ்சும் அட்டையிடை வாசம்
கோம்பை சோழவந்தான் மேலக்கல் என்று
சோம்பல் ஏதுமின்றி கடினமாய் உழைத்தார்

நலம்விரும்பும் நண்பர்கள் யோசனை கேட்டு
சிலகாலம் சென்னை மாநகரில் தங்கி
முறையாக வரைவாளர் தொழிற்கல்வி தனையே
நிறைவாக ஐடிஐ தனிலே பயின்றார்

மாதச் செலவிற்கு உதவித்தொகை நாற்பது
பாதங்கள் நொந்தாலும் நடந்தே பயணம்
இரண்டு பேண்டு அரைகப் காபிஎன
திரட்டிய செல்வம் சிக்கனப் பாடம்

நன்மதிப்பெண் பெற்று நலமுடன் திரும்ப
மின்சார வாரியம் இருகரம் நீட்டிற்று
பற்றிய அக்கரம் ஓய்வு வயதுவரை
உற்ற துணையப்போல் உடனிருந்து உதவிற்று

ஒண்டுக் குடித்தனம் வைத்தார் மதுரையில்
கண்டிப்பாய் இருந்து குடும்பத்தை நடத்தி
இல்லத்தில் வறுமை எத்தனை இருப்பினும்
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருந்தார்

கற்பினில் சீதையாம் கிருஹத்து லஷ்மியாம்
உற்ற துணையாம் சீதா லஷ்மியை
பாணிக் கிரஹணம் செய்து பெற்றனர்
மாணிக்கம் ஒன்றும் முத்துக்கள் மூன்றும்

செல்லப் பிள்ளைகள் மனைவி யுடனே
நெல்வேலி நகருக்கு மாற்றல் ஆனார்
கல்வி கேள்வியில் பிள்ளைகள் சிறக்க
நல்லற மாக இல்லறம் நடந்தது

அரசியல் ஆதாயம் கருதி வீணர்கள்
அரக்கியென அழைத்த ஹிந்தி அன்னையை
வீட்டினில் இருத்தி வாரிவாரி வழங்கி
நாட்டிற்கு நல்லதோர் சேவை செய்தார்

வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்
கேட்டதுண்டு! இரண்டும் செய்து முடித்திட்டார்
இருநூற்றி இரண்டு புதிய காலனி
அருமை மாப்பிள்ளை அவர்தம் மைத்துனன்

இலவச மின்சாரம் சனிதோறும் ஒருபடம்
பலவசதி நிரம்பிய தெர்மல்நகர் வாசம்
ஹிந்தியின் அருளால் இரட்டை வருமானம்
எந்தக் கவலையும் இல்லா பொற்காலம்

அறிஞர்க ளாக மகன்களை ஆக்கி
பொறிஞர் கல்வி பயிலச் செய்தார்
முப்பெரும் தேவியரை மருமகள்க ளாக்கி
அப்பாவின் கடமையைத் தப்பாமல் செய்தார்

தந்தையின் மறைவை ஒருவாறு தாங்கி
அன்னையை அவரிரு கண்போல் காத்தார்
தாத்தாவாய் பதவி உயர்வு பெற்று
பேத்தி பேரனென விளையாடி மகிழ்ந்தார்

எந்த கவலையும் இனிமேல் இல்லைஎன
சொந்த வீட்டில் சொகுசாய் வாழ்ந்தவர்
ஆல மரமொன்று வேருடன் வீழ்ந்தார்போல்
காலனின் கருவியாம் இதயநோய்க்கு இறந்தார்

எந்த அவையிலும் முந்தி இருத்தியே
தந்தையின் உதவியை தவறாது நீசெய்தாய்
உந்தன் அருளால் இனிநான் செய்வதெல்லாம்
எந்நோற்றான் உந்தைஎன ஊருரைக்க வாழ்வதுவே.


பிகு:25-04-2008 அன்று இறைவனடி சேர்ந்த எனது தந்தையின் வாழ்க்கையை கவிதையில் சுருங்கச் சொல்லும் ஒரு சிறு முயற்சி.

6/15/08

தசாவதாரம் - பத்து கருத்துகள்

1. பன்னிரெண்டாம் நூற்றாண்டு கதை ஒரு அருமையான ட்ரைலர் போன்று இருந்தது. இதை வைத்து இதே ப்ரம்மாண்டத்துடன் ஒரு படம் எடுக்கவும். தயவு செய்து அசினை மட்டும் தூய தமிழில் பேசி நடிக்க வைக்க வேண்டாம்.
2. மேற்சொன்ன ட்ரைலர் படத்தில் ஏன் வந்தது ? மற்ற கதைக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லையே ? முக்கிய கதையில் ஒரு வேடம் குறைந்ததோ? Labல் செத்துப் போகும் குரங்கு வேஷம் போட்டிருக்கலாமே?
3. சில வேஷங்கள் மிகவும் செயற்கையாக இருந்தன - ஆனால் போகப்போகப் பழகி விட்டன.
4. 95 வயது பாட்டி பிரமாதம்.
5. ரஜினியைப் போல் ஜப்பானியர்களின் மனதில் இடம் பிடிக்கவோ என்னமோ - ஒரு ஜப்பானியர் வேடம். கடைசி சண்டை அருமை.
6. தெலுங்கர் வேடம் தெலுங்கர்கள் தமிழ் பேசுவதையும் - பொதுவாக அவர்களை கிண்டல் செய்து அதில் காமெடி கண்டது. ஹிந்தி படங்களில் தமிழர்களை கிண்டல் செய்யும்போது எனக்கு வரும் கோபம் தெலுங்கு பேசும் நண்பர்களுக்கு இந்த படம் பார்த்து ஏன் ஏற்படக் கூடாது என்று தோன்றியது. பஞ்சாபி வேடத்தில் இந்த ப்ரச்சனை இல்லை.
7. கேன்சருக்கு நல்ல treatment - குறி பார்த்து கேன்சர் இருக்கும் இடம் பார்த்து சுடுவது என்று இந்த படம் பார்த்து தெரிந்து கொண்டேன்.
8. மல்லிகா செராவத்தை இடைவேளைக்கு முன்பே கொன்றிருக்க வேண்டாம். கால்ஷீட் ப்ரச்சனையோ?
9. நல்லவேளையாக நாத்திக திணிப்புகள் அதிகம் இல்லை.
10. லட்சக்கணக்கான பேரை பலி வாங்கிய சுனாமி வராமல் இருந்தால் கோடிக் கணக்கான பேர் இறந்திருப்பார்களோ என்ற படைப்பாளனின் யோசனை வித்யாசமானது.

6/4/08

நன்னாரி சர்பத்

சென்ற வாரம் வீட்டிற்கு அருகில் உள்ள South Indian Speciality Storeக்கு போயிருந்தோம். அங்கு நன்னாரி சர்பத் பார்த்தவுடன் அப்படி ஒரு மகிழ்ச்சி எனக்கு. சிறு வயதில் திருச்சியில் விரும்பிக் குடித்த நியாபகம். கடைக்காரரும், அவர் கடைக்கு வரும் தமிழ் மக்கள் நன்னாரி சர்பத்தைப் பார்த்தவுடன் அடைந்த மகிழ்ச்சிக்கு - மழைக் காலத்தில் சூடான வெங்காய பஜ்ஜியைப் பார்ப்பதற்கு உதாரணம் காட்டினார். என்ன ஓர் உதாரணம்.

வீட்டிற்கு வந்தவுடன் சுபாவை முதலில் சர்பத் செய்து தரச் சொன்னேன். பாட்டிலில் கொடுத்துள்ள அளவுகளைப் பயன்படுத்த Anti climax ஆக சுவை சுமாராகத்தான் இருந்தது. அடுத்த முறை தேவையான மாறுதல்களுக்குப் பின் அந்த சுவை கிடைத்தது. ஆகா.. என்ன ஒரு சுவை. இதோ ஒரு வாரம் கூட ஆகவில்லை - பாட்டில் காலி. அடுத்த முறை கடைக்குப் போகும்போது நாலைந்து வாங்கி stock பண்ண வேண்டும்.

உங்கள் வீட்டிற்கு அருகில் நன்னாரி சர்பத் கிடைக்கிறதா?

12/27/07

வேர்ட்ப்ரஸ்

என்னுடைய இந்த வலைப்பதிவும் வேர்ட்ப்ரஸ்ஸில் Mirror செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு, புது பதிவுகள் இரண்டு இடங்களிலும் இடம் பெறும். எந்த provider உங்களுக்குப் பிடித்திள்ளது என்று மறுமொழியிடவும்.

12/21/07

அண்ணா பல்கலைக்கழகமா - திரைப்பட நகரமா

.. என்று சந்தேகம் வரும் அளவு ஒரு காலத்தில் இருந்தது. நான் கல்லூரியில் இருந்தபோது ஒரு நாள் சன் தொலைக்காட்சியில் "ஒரு கைதியின் டைரி" படம் போட்டார்கள். கல்லூரி விடுதியில் உள்ள தொலைக்காட்சி அறையில் ஒரு பெரிய கூட்டமே கூடி பார்த்துக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரே விசில், கூச்சல். பார்த்தால் அண்ணா பல்கலைக்கழக Main buildingல் அடுத்த 10 நிமிடக் காட்சி எடுக்கப்பட்டிருந்தது. இதோ நம்ம main building entrance, அட இதோ நம்ம co-ops பக்கத்தில இருக்கும் மரப் படிக்கட்டு, இது நம்ம maths departmentஆ என்று ஒரே கூத்து தான். அதன் பின் பல பழைய (80s or 90s) படங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தைப் பார்த்து விட்டேன். அப்போதெல்லாம் court scene எடுப்பது எல்லாம் அங்குதான் போலும். உதாரணத்திற்கு நாயகன் படத்தின் இறுதிக் காட்சி.. அதில் காட்டப்படும் கோர்ட் அண்ணா பல்கலைக்கழக கட்டிடம் தான். ஆசை திரைப்படத்தில் சில காட்சிகள் கூட அங்கு எடுக்கப்பட்டது என்று கேள்வி. நல்லவேளையாக எனக்குத் தெரிந்தவரை சமீபத்தில் அங்கு திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை.

12/19/07

துறையூர் நினைவுகள் - வைரிச்செட்டிப்பாளையம்

இது நினைவுகள் வாரம் போலும்.

நேற்று மதியம் என் நீண்ட வருட நண்பன் மணியுடன் பேசிக்கொண்டு இருந்தேன். பேச்சு துறையூரில் பள்ளிப் பருவத்தில் நாங்கள் சேர்ந்து செய்த குறும்புகள், விளையாட்டுகள், பொதுவாக அந்த இனிய நாட்களைப் பற்றி சென்றது. அந்த இனிய நினைவிகளிலிருந்து ஒரு பகுதி. மற்ற பகுதிகள் இறைவன் கருணையுடன் விரைவில்..

துறையூர் - திருச்சியிலிருந்து 1 மணி நேர பஸ் பயண தூரத்தில் உள்ள ஊர். அதுவே எனது அம்மாவின் ஊர். எனவே பள்ளி விடுமுறை நாட்களில் அங்கு போய் விடுவது வழக்கம். சில வருடங்கள் எனது மாமா (திரு கிருஷ்ணமூர்த்தி) துறையூர் அருகே உள்ள வைரிச்செட்டிப்பாளையம் என்ற ஊரில் ஒரு வங்கியின் Managerஆக இருந்தார். நாங்கள் துறையூரில் இருக்கும் போது எங்களையும் வங்கிக்கு அழைத்துச் செல்வார். அங்கு அவருக்கு உதவியாக சில நேரங்களும் உபத்ரவையாக பல நேரங்களும் இருப்போம்.

அங்கு போகும் Team பற்றி சொல்லவில்லையே.. என்னைத் தவிர மேற்சொன்ன நண்பன் மணி மற்றும் எனது சித்தி மகன் ரமணா, சித்தி மகள் காயத்ரி, எனது இன்னொரு மாமா மகன் நாகராஜன், இன்னொரு மாமா மகன் ஆத்மா (இவன் கதை இன்னொரு நாள்).. யார் பெயராவது விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்.

அங்கு நாங்கள் செய்யாத வேலைகளே இல்லை. ஒரு முறை ஒரு Ledgerக்கும் இன்னொரு Ledgerக்கும் Tally பண்ணும்போது ஒரு 10 பைசா இடித்தது. அதைக் கண்டுபிடிக்க 3-4 நாட்கள் ஆனது. எப்படி கண்டுபிடித்தோம் என்று கேட்காதீர்கள்.. நினைவில் உள்ள வரை இரண்டு Ledgerகளையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வரியாக சரி பார்த்தோம்.

உதாரணத்திற்கு ஒன்று பார்த்தோம். வேண்டுமென்றால் பின்னர் மற்றவைகளைத் தருகிறேன். இப்போது உபத்திரவங்களுக்கு வருவோம்.

எங்களுக்குப் பிடித்த விளையாட்டு ஃபோன் விளையாட்டு. ஃபோன் எடுத்து ஏதாவது நம்பருக்கு அடிப்போம். யாராவது எடுத்தால் சில நிமிடங்களுக்குப் பேசவே மாட்டோம். எதிர் திசையில் hello hello என்று கத்திக் கொண்டிருப்பர். இல்லையென்றால் நாங்களும் hello hello என்று பல குரலில் பேசுவோம். யார் என்று கேட்டாலும் பதில் hello தான். Randomஆக ஃபோன் அடித்து போர் அடித்து துறையூரில் உள்ள எங்கள் தூரத்து உறவினர் வக்கீல் மாமாவிற்கு ஃபோன் செய்ய ஆரம்பித்தோம். அவரிடமும் அதே விளையாட்டு. இதில் கொடுமை என்னவென்றால் வக்கீல் மாமா வீட்டு மாடியில் தான் சாஸ்த்ரிகள் மாமா தங்கியிருந்தார். அங்கே வேதம் படிக்கப் போகும்போது வக்கீல் மாமா எங்களிடமே இப்படி வரும் ஃபோன் கால் பற்றிப் புலம்புவார்.

அங்கு ஒரு adding machine உண்டு. அதில் விளையாடுவது என்பது எங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சில சமயம் உதவியாக ledger page total, adding machine மூலம் செய்வோம். பல முறை விளையாட்டிற்கு அதை உபயோகித்தோம். ஒரு முறை நாகராஜன் தனது ஆராய்ச்சிக்கு அதை உபயோகித்தான். சாதாரணமாக பேப்பர் செல்லும் இடத்தில் இரண்டாக மடித்து நுழைத்தான். அதுவும் அழகாக வெளியே வந்தது. பின் நான்காக மடித்து உள்ளே நுழைத்தான். அது எங்கோ போய் சிக்கிக் கொண்டது. அவ்வளவுதான்... கொஞ்ச நாட்களுக்கு அந்த adding machine உபயோகமில்லாமல் மூலையில் கிடந்தது. பின்னர் ஒரு விடாக்கொண்டர், சிக்கிய பேப்பரை வெளியே எடுக்க, எங்களது வேலை தொடர்ந்தது. என்ன.. நாகராஜனுக்கு மட்டும் adding machine பக்கம் வர தடா.

இந்தப் பதிவு நீளமாகி விட்டது.. எனவே வைரிச்செட்டிப்பாளையம் நினைவுகள் தொடரும்..

பி.கு: எழுத்துப்பிழைகள் முடிந்த வரை திருத்தப்பட்டன. கூத்தடித்த கூட்டம் விரிவாக்கப்பட்டது. சுட்டிக்காட்டிய ராஜப்பா மாமாவிற்கு நன்றி.

பி.கு2: மணி தனது நினைவுகளைப் பின்னூட்டத்தில் தந்துள்ளான். இங்கே படிக்கவும்.

பி.கு3: மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கரிகாலி கும்பலுக்காக புதிய வலைப்பதிவைத் துவக்கி இருக்கிறேன்.

12/18/07

கல்லூரி நினைவுகள் - GK

இன்று காலை வண்டியில் வந்துகொண்டிருந்த பொழுது என்னையும் அறியாமல் பாடிய பாட்டு - " உனக்கென்ன மேலே நின்றாய்". என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் ஒன்று. ஆனால் இன்று இதைப் பாடும்போது நினைவிற்கு வந்தவன் GK என்ற G Karthikeyan - என்னுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவன். எங்கள் கல்லூரியில் ஒரு விழாவில் இந்த பாடலுக்கு நடனம் ஆடினான். எங்கள் அனைவர் கண் முன்பும் சிம்லா ஸ்பெஷல் கமலை கொண்டுவந்து நிறுத்தியது அவனது நடனம்.

நடனம் என்றவுடன் Backstreet Boys உம் Michael Jacksonஉம் ஆடிய காலம் அது (இப்பொழுது எப்படி என்று தெரியவில்லை). அந்த குறுகிய வட்டத்திலிருந்து விலகி தனக்கென்று ஒரு பாணியை வைத்து ஆடினான் GK. அவன் முதன் முதல் கல்லூரியில் மேடை ஏறி ஆடியது ஒரு சந்திரபாபு பாடலுக்கு. சந்திரபாபுவின் பாணியை அப்படியே கையாண்டு ஆடுவது எளிதல்ல. அதை அழகாகக் கையாண்டு ஆடியது இன்றும் நினைவில் இருக்கிறது (Fresher's party??). இது எங்கள் துறைக்குள் நடந்த விழா. கல்லூரியே பார்க்க அவன் "என்னுயிரே" (உயிரே) பாடலுக்கு ஆடினான். ஆடிய அனைவருள்ளும் தமிழ் பாடலுக்கு ஆடியது இவன் ஒருவனே என்றால் பாருங்கள். முடிவை அறிவித்த நடுவர் இவனது நடனத்தை தனியாக புகழ்ந்தார் - எனினும் முதல் பரிசை இவனுக்குக் கொடுக்காமல் அநியாயம் செய்தனர். இருந்தபோதும் ஒவ்வொரு விழாவிலும் இவனது வித்தியாசமான நடனத்தைக் காண அவனுக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் (அடியேனையும் சேர்த்து தான்).

இப்பொழுது எங்கு இருக்கிறான் என்று தெடியவில்லை. மேற்படிப்பு படிக்கும் போதும் அவனும், எங்களது இன்னொரு நண்பன் கார்த்திக்கும் சேர்ந்து நடனம் ஆடியது வரை தெரியும். அவனது திருமணத்திற்க்கும் செல்ல முடியவில்லை...

கல்லூரி நினைவுகளில் மூழ்கி நிற்கும்
-மகேஷ்